காற்று வரட்டும்! என்று
ஜன்னல் கதவுகளைத்
திறந்து வைக்கிறேன் - பிறகு
சக மனிதர்களின்
எண்ணப் புழுதி
உட்புகுவது கண்டு
அடைத்தும் வைக்கிறேன்.
திறப்பதும்
அடைப்பதுமான
இந்நிகழ்வில்....
பெரும்பாலான கவிதைகள்
ஜன்னல் கதவுகளின்
இடுக்குகளில்
சிதைந்தும்
சிற்சில சமயங்களில்
முழுமையாகவும் பிரசவிக்கின்றது.
வாழ்க்கை நீரோட்டத்தில்
மூக்கு பிடித்து தம் கட்டுகிறேன்.
எப்போதெல்லாம்
மூச்சு முட்டுகிறதோ
அப்போதெல்லாம்
வெளி வர தவிப்பது போல
ஜன்னல் கதவுகளை
திறந்து வைக்கிறேன்
ஒரு
கனத்த மழையில்
ஜன்னல் திரைச்சீலைகள்
கண்ணீர் வடித்துகொண்டிருக்கின்றன.
குளிர்ந்த காற்று
எனக்குள் வீசிகொண்டிருக்கிறது.
மனிதர்கள்
ஜன்னல் கைதிகள்.
சில பேர்
திறந்தே வைக்கிறார்கள்.
சில பேர்
அடைத்தே வைக்கிறார்கள்.
பகுத்தறிவுவாதிகள்
உடைத்து எறிகிறார்கள்.
ஞானிகளோ
வெளியேறி விடுகிறார்கள்.
நான் வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் ஜன்னலின் வழியே...!
No comments:
Post a Comment